Saturday, May 22, 2010

கல்மிதக்கும் ஆறு...

ஒன்றைமட்டும் சொல்கிறேன்
நீயொன்றும் புனிதனல்ல‌
நானொன்றும் யோக்கியனுமல்ல
அவர்களைப் பற்றி
மதிப்பீடு செய்ய.

Monday, May 17, 2010

அல் உலகு

மன நிலைபிறழ்ந்தவரிடமிருந்து
அன்பையும்
தொடர் அவமதிப்பிற்குப் பின்னும்
யாசகம் கேட்டு உண்டும் பசியடங்காது
ஒட்டுத்துணியின்றி மல்லாந்து
தன் அம்மாவுடன் உக்கிர வெயிலில்
எல்லாப் பிண‌க் கால்களும் செல்ல‌
நடைபாதையில் உயிர்ப்பாய் உறங்கும்
ஒரு பெண் குழந்தையிடமிருந்து
கனத்த ரவுத்திரத்தையும்
தாழ்வுமனத்தில் கனந்தோறும் பதறும்
ஒரு மண்வாசியிடமிருந்து
பெருங்காதலையும்
உயிர்கசியும் நேசத்தை
உன்கழிசடைத்தனம் மணக்க
உன்னால் இழிவுசெய்யப்படுகிற‌
மூன்றாம் பால் அன்பரிடமிருந்தும்
கனியும் தாய்மையை
உன்னால் குற்றவாளியெனச் சொல்லப்பட்டவரிடமிருந்தும்
பெற்றுத் தழைக்கும் அந்தக் கொடி
நிலத்தோடு படர்கிறது
அமுதம் தளும்பும் கடலென.