Sunday, March 28, 2010

வலியைப் பருகும் அன்னம்

கனவும் நனவும்
முயங்கிடும் பொழுதாய்
நிலாக்கடல் போதவிழும்

புளிப்பேறிய களாப் பழமுண்டவன்
பாடியதென்னவோ
வேனிற்காலத்தில்
அரும்பும் வேப்பம்பூக்களின்
சுவையயைத்தான்
என்பதை அனுமானிக்க
நான்
சாகவேண்டியதாயிற்று.

Wednesday, March 24, 2010

சங்கக் கவிதையின் நிழலில் ....


நோகோ யானே ? தேய்கமா காலை!
பிடியடி யன்ன சிறுவழி மெழுகி
தன்னமர் காதலி புல்மேல் வைத்த‌
இன்சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயில்
பலரோ டுண்டன் மரீஇ யோனே!

‍‍‍‍....புறநானூறு..234.

திணை: பொதுவியல். துறை: கையறுநிலை

பாடியவ‌ர். வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன். வேள் எவ்வி
இக்கவிதை மரணத்தின் துயரையும் மரணத்தின் பின்னுள்ள வாழ்தலையும் நம்மனத்துள் கசியவிடும்பொழுது, பகிர்தலே வாழ்தலாய்க் கொண்ட மனிதத்துவத்தின் உன்னதமும் அதன் ஆற்றொனாத்தனிமையின் வலியும் சமூகதளத்தில் அதன் முக்கியத்துவமும் அவ் இருப்பற்றதன் வெறுமையும் பெண்ணிருப்பின் கையறு தன்மையும் ஒருங்கு நம் உள்ளத்தேபாயும் மரண நதி.

வேள் எவ்வி குறுநிலத்தலைவன். எப்போதும் தனித்து உண்ணுதல் அறியாதவன்.பலரோடே உண்பவன். உலகே புகும்படியாக எப்போதும் திறந்த வாயிலை உடையவன். அவன் இறந்துவிட்டான். அவன் மனைவி பெண் யானையின் அடியை ஒத்த இடத்தை சாணத்தால் மெழுகி புல்லைப் பரப்பி அதன்மீது உப்பில்லாத் பிண்டச்சோற்றை இட்டு இறந்த தன் கணவனுக்குப் படைக்கிறாள்( படைத்து உண்கிறாள்).தனித்து உண்ணுதல் அறியாத அவன் எப்படி உண்பான் தனியாக‌ அப்பிண்டச்சோற்றை. அவன் மனைவியின் துயரோ சொல்லிட இயலாது. இக்காட்சியை நான் தினம் பார்க்கிறேன். இதன் துயரம் மிகக்கொடிது.ஆதலால் என் வாழ்வு அழிந்து போவதாக என்கிறார் கவி. கணவனையிழந்த பெண் எப்படி வாழவேண்டும் என்ற துயரம் அதனினும் கொடிது.

வெள்ளெருக்கிலையார்: வெள்ளெருக்கிலை. இது ஒரு மூலிகைத்தாவரம். சமற்கிருத‍, ஆங்கில மோக அடிமைக்காலத்தில் நம்மவரின் மண்ணுடன் கலந்த வாழ்தலைக் காணவேண்டும்.

Thursday, March 18, 2010

நீர்க்குமிழியுடைத்து விளையாடும் காற்று

பைத்தியமாயிருப்பதே
ஃபேஷனாகி விட்டதால்
உங்களைப்போல் உடையணிந்துகொள்ளவும்
முயற்சிக்கிறேன்
இப்பொழுதெல்லாம்.

Monday, March 8, 2010

தன்னை இழக்கும் ருசி

குரூரத்தின் வன்ம விதைகளை
கருணை பொங்க‌
என்னுடல் வெளியில்
ஊடகனாய் விதைத்தாய்.
என்
கையறு வாழ்வில் உனக்கென்ன
கவலை.
நாம் சந்திக்கும் குறியிடங்களை
நீதான் தீர்மானிக்கிறாய்
எப்போதும்.
அது யந்திரோபாயமென்பதை
உணர்ந்ததில்லை யான்.
குறிப்புக்கு;
பெருமைதான் யெமக்கு அதில்.
ஒருபோதும் அல்லகுறியாவதில்லை
உனக்கு .

Monday, March 1, 2010

வதைவனம்

உன் பசப்புகளுக்கு

எனது கடல்

கட்டுண்டு மயங்கியது

ஒரு நிழலின்

அந்திப்பொழுது என்றறிந்து கொண்டது

மசமசக்கும் அறிகுறிகள்

புன்முறுவலாய் மாறுமா என்ன‌