Wednesday, March 24, 2010

சங்கக் கவிதையின் நிழலில் ....


நோகோ யானே ? தேய்கமா காலை!
பிடியடி யன்ன சிறுவழி மெழுகி
தன்னமர் காதலி புல்மேல் வைத்த‌
இன்சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயில்
பலரோ டுண்டன் மரீஇ யோனே!

‍‍‍‍....புறநானூறு..234.

திணை: பொதுவியல். துறை: கையறுநிலை

பாடியவ‌ர். வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன். வேள் எவ்வி
இக்கவிதை மரணத்தின் துயரையும் மரணத்தின் பின்னுள்ள வாழ்தலையும் நம்மனத்துள் கசியவிடும்பொழுது, பகிர்தலே வாழ்தலாய்க் கொண்ட மனிதத்துவத்தின் உன்னதமும் அதன் ஆற்றொனாத்தனிமையின் வலியும் சமூகதளத்தில் அதன் முக்கியத்துவமும் அவ் இருப்பற்றதன் வெறுமையும் பெண்ணிருப்பின் கையறு தன்மையும் ஒருங்கு நம் உள்ளத்தேபாயும் மரண நதி.

வேள் எவ்வி குறுநிலத்தலைவன். எப்போதும் தனித்து உண்ணுதல் அறியாதவன்.பலரோடே உண்பவன். உலகே புகும்படியாக எப்போதும் திறந்த வாயிலை உடையவன். அவன் இறந்துவிட்டான். அவன் மனைவி பெண் யானையின் அடியை ஒத்த இடத்தை சாணத்தால் மெழுகி புல்லைப் பரப்பி அதன்மீது உப்பில்லாத் பிண்டச்சோற்றை இட்டு இறந்த தன் கணவனுக்குப் படைக்கிறாள்( படைத்து உண்கிறாள்).தனித்து உண்ணுதல் அறியாத அவன் எப்படி உண்பான் தனியாக‌ அப்பிண்டச்சோற்றை. அவன் மனைவியின் துயரோ சொல்லிட இயலாது. இக்காட்சியை நான் தினம் பார்க்கிறேன். இதன் துயரம் மிகக்கொடிது.ஆதலால் என் வாழ்வு அழிந்து போவதாக என்கிறார் கவி. கணவனையிழந்த பெண் எப்படி வாழவேண்டும் என்ற துயரம் அதனினும் கொடிது.

வெள்ளெருக்கிலையார்: வெள்ளெருக்கிலை. இது ஒரு மூலிகைத்தாவரம். சமற்கிருத‍, ஆங்கில மோக அடிமைக்காலத்தில் நம்மவரின் மண்ணுடன் கலந்த வாழ்தலைக் காணவேண்டும்.

2 comments:

Athisha said...

நல்ல பகிர்வு நண்பா. நன்றி

நந்தாகுமாரன் said...

Could have explained line by line ... anyways thanks for sharing ...cano